மறைக்கப்பட்ட உண்மைகள்
பெரியோர்கள்
மகான்களின்
பிறந்த தினங்களில்
நினைவு தினங்களில்
நம் நினைவுக்கு வருவது
அவர்களைவிட
அன்றைய விடுமுறை தினமும்
அது சார்ந்தத் திட்டமிடல்களுமே
திருமணங்களில்
மணமக்களை
வாழ்த்திச் செல்பவர்களை விடவும்
கணக்கு வைத்து
கணக்குத் தீர்த்து
வந்திருப்போரோடு உறவைப் புதுப்பித்துக்
கலைபவர்களே அதிகம்
கடவுளர்களின் எண்ணிக்கை
பெருக்கிப் போனதால்
பக்தியும் நீர்த்துப் போய்விட
பண்டிகைகள்
நமக்கோ செலவுதினம்
சார்ந்திருப்போர்கோ
வரவு தினம்
நமக்கெல்லாம்
புத்தாண்டு பிறப்பது
ஆண்டுயர்வு நாளில்
காதலராய் இருந்தபோதோ
இருவரின் பிறந்த நாட்கள்
வேரெவருடையதையும் விட
புனித நாட்கள்
பெற்றோரானதும்
கருவில் சுமந்து
காத்திருந்து பெற்ற
நம் குழந்தைகளின்
பிறந்த நாட்களை விடவும்
வேறு யார் பிறப்பில்
பொங்கும் பூரிப்பு
எம் தாய் தந்தையர்
விழிமூடித் துயின்று
குழிமூடப் பிரிந்த நாளில்
உயிர் தவிக்க
அந்த கணம் உணர்ந்த
வெறுமையும் தனிமையும்
நினைவில் உறைந்து போக
மனம் உணரும்
அவர்தம் நினைவுநாளை விட
வேறு எவருடைய நினைவுநாட்கள்
எம்மை அதிக துயரத்தில்
ஆழ்த்திவிட முடியும்
மனசாட்சிகள்
மறைத்து வைத்திருக்கும்
விழாக்களையும்
வைபவங்களையும் பற்றிய
மறைக்கப்பட்ட உண்மைகளின் பட்டியல்
இப்படித்தான் நீளுகிறது!
5 Comments:
நல்லா இருக்கு.
:)
வாங்க வாங்க பாரி! நலமா? இந்தப் பக்கம் வந்ததற்கும் உங்கள் ஒற்றைச் சொல்லுக்கும் நன்றி!!!
நன்றாயிருக்கிறது உதயா.
நிதர்சனமான வரிகள்
ஆழ்ந்த பார்வை!அருமை உதயா!
நன்றி தோழி சந்திரவதனா!
வங்க மீனா! நலமா? எத்தனை நாட்களாகின்றன உங்களைப் பார்த்து ம்ஹூம் படித்து! நன்றி தோழி!
Post a Comment
<< Home